Donnerstag, Juli 19, 2012

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் -- நூல் விமர்சனம்பகுதி:2

2:

இலங்கைத் தமிழ் மக்களை படுகொலை செய்த இந்திய இராணுவத்தின் கப்பல், ஹெலி, ஜீப்புக்களில் பயணிக்க, ஊர் சுற்றிப் பார்க்க புஸ்பராசாவுக்கு எந்த மன நெருடலும் வரவில்லை. இந்தியபடையினரின் கப்பலில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பயணம் செய்ய நேர்ந்த போது படுக்கை, உணவு இவைகட்காக தான் பட்ட சிரமமே இவருக்கு பெரிதாக தெரிகிறது. இவைகளை ஒரு மேற்குலகம் சார்ந்த உயர்வர்க்கக் கனவான்களின் மனநிலையோடு புஸ்பராசா எழுதுகின்றார். நாகரீகமும், உயர்ந்த வாழ்க்கை முறையும், செல்வச்செழிப்பும் கொண்ட பிரான்சு தேசத்திலிருந்து கருணை கூர்ந்து இலங்கை சென்ற தனக்கு இத்தகைய இடர்கள் ஏற்பட்டதை எண்ணியெண்ணி அவர் அடைந்த வருத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல. இலங்கை பொலிஸ், இராணுவம் இவர்களிடம் தான் பட்ட சித்திரவதைகளை பெருமளவு நேர்மையோடு எழுதியுள்ள இவர் நாலாவது மாடிகளையும், இராணுவமுகாம்களையும் மிஞ்சவல்ல தூசாகக் கருதக் கூடிய தமிழ் இயக்கங்களின் படுகொலைககள், வதை முகாம்களை ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம். பார்த்திருந்தால் சித்திரவதைக்கு பெயர்போன இன்ஸ்பெக்டர் பஸ்தியான்பிள்ளை போன்றவர்கள் மிகவும் அற்பமாய், சாதாரண புழு பூச்சியாய்த் தென்பட்டிருப்பார்கள். தமிழ் இயக்கங்களின் குரூரமான கொலையாளிகளை விட நல்ல மனிதர்களாக கண்டறியப்பட்டிருப்பார்கள். இலங்கை அரசின் வன்முறையை விட புலிகளின் பயங்கரவாதம் மோசமானது, எந்த மனித நெறிகட்கும் சட்டவிதிகட்கும் உட்படாதது. புலி அடிக்குமுன் கிலி அடிக்கும் என்பதற்கேற்ப புஸ்பராசா பரிபூரண எச்சரிக்கையுடனேயே புலிகளை நெருங்கியுள்ளார். வன்னியுட்பட பிரபாகரன் செங்கோலாட்சி செலுத்தும் பிரதேசங்களில் புஸ்பராசாவின் நூல் தடை செய்யப்படவில்லை என்பதையும் EPRLF இனரோ கூட்டணியினரோ இவரது எழுத்தை விமர்சிக்கவில்லை என்பதையும் நோக்கும் போது புஸ்பராசா எத்தகைய எழுத்தைப் படைத்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் அரசியலை மதிப்பவர்களின் நன்மதிப்பை புஸ்பராசாவினால் ஈட்ட முடியாது. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் நூல் வெளிவந்த போது பிரான்சில் அதன் மேலான விமர்சன முயற்சிகள் எழுந்த போது புஸ்பராசா அவைகளை கடுமையாக எதிர்த்தவர். தன் கருத்தை இடைமறித்துப் பேசுபவர்களை அவர் பொறுத்துக் கொள்ளக் கூடியவரல்ல. தன் எழுத்து மீது அதிருப்தியை வெளியிட்டவர்களை அவர் மன்னித்தவருமல்ல. தன் கருத்தை மற்றொருவருடன் பகிர்ந்து கொள்வது என்ற போக்குகட்டு புஸ்பராசா பழக்கப்படாதவர். விமர்சனம செய்வது அவரைப் பொறுத்த வரை அவர் மேலான பிழைகண்டு பிடிப்பு, நொட்டைச் சொல்லல். புஸ்பராசா சராசரி ஜனநாயக ரீதியிலான கருத்து மாறுபடுகளைக் கூட சகித்ததில்லை. அவரது விசாலமற்ற சிந்தனையுள் இவைகட்கு இடமில்லை. வடக்கு கிழக்கு மக்களின் புவியியல் கலாச்சார வேறுபாடுகளை பேசாவிட்டாலும் பரவாயில்லை, தனது சொந்த ஊர், வாழ்ந்த கிராமம் பற்றிய சமூகவியல் நிலை, தான் விளைந்த சூழல் என்பன பற்றிய அறிமுகங்ளைக் கூட அவர் சொல்லவில்லை. சூழல் பற்றிய கவனமில்லாத மனிதரான புஸ்பராசா தமிழ்மக்கள் ஆளுமையோடு சொல்ல முடியாது போனது அதிசயமல்ல. 'இடுப்பு முறிந்த கோழிக்கு உரல் குழியே கைலாசம்' என்பது போல வலதுசாரி சிந்தனையாளரான புஸ்பராசாவிற்கு தமிழ் தேசியத்தில் முத்தியடைவதைத் தவிர வேறு மார்க்கமில்லை.

புஸ்பராசா ஐரோப்பிய இலக்கியசந்திப்புக் குழுவுடன் நீண்டகாலம் தொடர்புடையவர். அதனூடாகவே அவர் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டவர். அதில் அவர் அநேகமான நண்பர்களைக் கொண்டிருந்தார் எனினும் அவை பற்றிய எந்தத் தகவலும் அவரது நூலில் புகலிடம்சார்ந்த விபரிப்புகளில் இடம் பெறவில்லை. புஸ்பராசாவின் அரசியல் இலக்கிய தோழரான புலிகளால் கொல்லப்பட்ட திரு.சபாலிங்கம் போதிய முக்கியத்துவத்தை இந்நூலில் பெறவில்லை. சபாலிங்கமும் புஸ்பராசாவும் இணைந்து ஈழப்போராட்டம் பற்றிய நுhல் எழுதி வருவதாய் சொல்லப்பட்ட சமயமே சபாலிங்கம் புலிகளால் பாரிசில் வைத்துக் கொல்லப்பட்டார். பழைய போராளியான சபாலிங்கம் பிரபாகரனின் உண்மையான வரலாற்றை எழுத முயன்றமைக்காகவே சுடப்பட்டதாய் இலக்கிய சந்திப்பு நண்பர்கள் வெளிப்படையாகவே பேசிக்கொண்டனர் இன்னமும் பேசிவருகின்றனர். சபாலிங்கம் புஸ்பராசா இருவரும் இணைந்து எழுதிய நூலே இப்போது புஸ்பராசாவின் பெயரில் வெளிவருவதாய் இப்போதும் பல இலக்கிய சந்திப்பு நண்பர்களிடம் கதையடிபடுகின்றது. இவைகளை நாம் எதிர்கால விமர்சகர்கட்கு தொடர்ந்து ஆய்வு செய்யும்படி விட்டுவிடலாம்.

புஸ்பராசா அவர்களின் பார்வையில் பிரபாகரன்

விரக்தியுற்று கெட்டு நொந்து போயிருக்கும் தமிழ் மக்களுக்கு பிரபாகரனை "தம்பி" என்று அழைத்து ஆற்றல்மிக்க தலைவர் என்று எமக்கு புஸ்பராசா அறிமுகமும் செய்து வைக்கின்றார். 'பிரபாகரன் என்ற மனிதர் இல்லாவிட்டால் புலிகள் இயக்கம் இப்படி இராணுவ, உளவுத்துறை நிர்வாக அறிவுகளைக் கொண்டதாக வளர்ந்திருக்க முடியாது' என அவரது எழுத்து அத்தாட்சி தருகின்றது. புஸ்பராசா தான் சகல இயக்கங்களையும் கடந்த பொது மனிதராக, அரசியல் ஆய்வாளராகத் தோற்றம் காட்டிக் கொண்டே புலிகள் பற்றிய எத்தகைய மனப்பதிவை எம்மிடம் எற்படுத்த முயற்சிக்கின்றார்? அவர் தன்னோடு வாழந்து போராடி மரணமடைந்த புலிகளால் கொல்லப்பட்ட மனிதர்களை எல்லாம் எப்படி மறந்து போனார். புஸ்பராசா மிகவும் மதித்த திரு.அமிர்தலிங்கத்தை, இவர் அங்கம் வகித்த EPRLF இன் தலைவர் தோழர் பத்மநாபாவை, பாரிசில் இவரது நெருங்கிய நண்பர் சபாலிங்கத்தை இப்படி பல ஆயிரம் பேரை எதிர்கருத்துடையவர்களைக் கொன்றொழித்த தேசியத் தலைவரை எப்படிப் பாராட்ட முடிகின்றது? புலிகளின் இராணுவம் உளவுப்படைகள் ஒரு பாசிச அடிப்படையில் கட்டப்பட்ட கொலை இயந்திரங்கள், சொந்த தமிழ் மக்களை அவர்கள் மத்தியிலான ஜனநாயக முறைகளைக் கூட சிதைத்தழித்தவை என்ற உண்மையை புஸ்பராசாவின் பாராட்டுக்கள் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை.? பாசிஸ்ட்டுக்களின் நல்ல பண்புகளை, இனிய குணாம்திசயங்களை, வீர இயல்புகளை தேடுபவர் எத்தகைய அரசியல் மதி கொண்டவராக இருப்பார்? புலிகளை பாசிச இயக்கம் என்று பிரகடனப்படுத்த வெட்கப்படுபவர்கள், தமிழ் தேசிய விடுதலையின் பெயரால் புலிகட்கு பொது மன்னிப்புத் தருவபவர்களும் பாசிச கலாச்சராத்தை வளர்ப்பவர்களே! அதை ஊக்குவிப்பவர்களே!! நாளைய வரலாற்று விசாரணைகளில் புஸ்பராசாவும் குற்றறவாளியாக கூண்டிலேற வேண்டி வரும்.

புஸ்பராசா அண்ணன் அமிர்தலிஙகம் அரசுகட்டிலில் வீற்றிருந்த காலததில் அவரை அண்டி நின்றார். பின்பு EPRLF ஆட்சியில் பத்மநாபாவுக்கு நெருக்கமானவர். இப்போ மலர்ந்துள்ள புலிகளின் ஆட்சியில் பிரபாகரன் மேல் மையல் கொள்கின்றார். ஆக புஸ்பராசாவை எல்லாக் காலத்திலும் பயிர் செய்யக்கூடியவர், அதிகாரத்தின் நிழலில் கூடி நின்று ஆதாயம் பெறக் கூடியவர் என்று நாம் நம்ப போதிய தரவுகள் உள்ளன. புஸ்பராசா பிரமிக்கும் புலிகளின் இராணுவ உளவு அமைப்புக்கள் எத்தகையவை? மக்களுக்கு இவற்றோடு உள்ள பங்கும் உறவும் எத்தகையது? என நாம் விசாரிக்க வேண்டியுள்ளது. புலிகளின் பாசிச இராணுவவாதம் தற்கொலையை போற்றியது மரணத்தையும் சுயஅழிவையும் வழிபாட்டுக்குரியதாக ஆக்கினார்கள். மரணத்திற்குப் பின்னரான மாவீரர் வாழ்வு இலட்சியமயப் படுத்தப்பட்டது. தமிழ் மக்களின் வாழும் ஆசை கோழைத்தனம் என்று இழிவு செய்யப்பட்டது. சாவெறித்தனமாகப் போற்றப்பட்டது; உன்னதமாக்கப்பட்டது. போராட்டம் வாழ்வதற்காக என்பது போய், சாவதற்கு மண்ணோடு மண்ணாய்க் கரைந்து போவதற்கு என்பதாயிற்று. தமது காரியங்கட்கு அரசியல் ரீதியில் பொறுப்புச் சொல்லத் தெரியாத குழந்தைகள் ஆயதபாணிகளாக்கப்பட்டு மிருக ஒழுங்குக்குள் ஈவிரக்கமற்ற முறையில் பயிற்றுவிக்கப்பட்டனர். கேள்விகளை எழுப்பாத சொன்னதைச் செய்யும் கொலை இயந்திரங்களாக அவர்கள் ஆயினர். உண்மையான புரட்சியாளர்கள் வாழ்வை இகழாதவர்கள் ஒவ்வொரு துளிப்பொழுதையும் மானுட விழுமியங்களால் அளப்பவர்கள். புலிகட்கு வாழ்வை பற்றி என்ன தெரியும்? ஆனால் 'தேசியத்தலைவர்' இலங்கையிலேயே ஆகக் கூடிய பாதுகாப்புடன் கூடிய மனிதர். அவரது உயிர் எதிரிகளிடமிருந்து பரிபூரணமாய் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் உள்ள எந்த மனித உயிரும் அது தமிழரோ, சிங்களவரோ, முஸ்லீமோ எவராயினும் அதைப் பறிக்க தேசியத் தலைவருக்கு உரிமையுண்டு. இந்த இராணுவவாதத்தை, பாசிச ஆயுத கலாச்சாரத்தை புஸ்பராசா திறமானது என்கின்றார், மெச்சுகின்றார்.

தேசியத்தலைவரது தனிப்பட்ட பண்புகள் போற்றத் தகுந்தவையா? இயக்கம் தொடங்கிய காலங்களில் தன் கூடப்படுத்தவர்களைக் கூட நம்பாமல் அவர்களின் துவக்கை வாங்கி தான் வைத்துக் கொண்டு படுக்கும் மனிதர். படுத்து விட்டு இடையில் இரவில் எழுந்து கால் இருந்த இடத்தில் தலையும் தலை இருந்த இடத்தில் காலும் வைத்து மாற்றி படுக்கும் பேர்வழி. தன் நிழலைக் கூட நம்பாதவர்கள், சிறந்த இராணுவ, தலைமை பண்புள்ளவர்களாக புஸ்பராசாவால் கண்டெடுக்கப்படுகின்றனர். மாற்று இயக்கங்களை மட்டுமல்ல, குழந்தைப் பருவத்திலே பழகிய மாத்தையா, மனோ மாஸ்டர் போன்றவர்கள் கூட தேசியத் தலைவரால் புதைகுழிகட்கு அனுப்பப்பட்டனர். மனோ மாஸ்டர்-பிரபாகரனை வல்வெட்டித்துறையில் புருசன் பெண்சாதி என்று ஊர்ச்சனம் பகிடி பண்ணுவது வழக்கம். அத்தகைய மனோ மாஸ்டர் பிற்காலத்தில் தெரு நாய் போல சுடப்பட்டார். இங்கு பிரபாகரனை அல்லது புலிகளைப் பாராட்டுவதென்பது தமிழ் மக்களின் பாரம்பரிய நாகரீகக் கலாச்சார விழுமியங்களையும் மனித ஆளுமைகளையும் அறிவுத்திறன்களையும் மானங்கெடுத்தி குழிதோண்டிப் புதைப்பதாகும். தமிழ் மக்களின் சுதந்திரத்தின் பெயரால் பெருத்துப் பரவியுள்ள பயப்பீதி, அரசியல் கோழைத்தனம், அடிமைத்தனம், பொது வாழ்வில் இருந்து ஒதுங்குதல், அநீதிகட்கு எதிராய் போராடாமல் இருத்தல் போன்ற பண்புகளை ஏற்றுக் கொள்வதாகும். தேசிய தலைவரின் சித்தமே தெய்வ சித்தம் என்பதாய் நிலைமையுள்ளது. முழுச்சமூகமும் அடிமைகளாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. புஸ்பராசாவின் பிரபாகரன் மீதான நேசத்தை தமிழ் விடுதலையின் பேரிலானதாக குழப்பியடித்து விட நிறைய மார்க்கங்கள் உண்டு. புலிகளை கைவிடும் தருணம் வரும் போது தான் தமிழ் தேசிய விடுதலைக்காகவே புலிகளை மெச்சியதாய் நியாயம் சொல்லத்தக்க வழியையும் அவர் விட்டு வைத்துள்ளார். இங்கு நாம் இத்தகைய சகல சந்தர்ப்பவாதத்திற்கும் இடம் தரக் கூடிய சகல பாதைகளையும் நாம் அடைக்க வேண்டும். வெட்டொன்று துண்டிரண்டாக தம் அரசியல் நிலையை வெளியிடாத சகல போக்குகளையும் அரசியல் ரீதியில் அம்பலப்படுத்தி மரியாதை கெடுத்த வேண்டும்.

புலிகள் பரப்பியுள்ள எண்ணற்ற பொய்களைத் தகர்க்க எமக்கு வாழ் நாள் போதாத நிலை. இந்த நிலையில் புலிகளின் பொய்கட்கும் பிரச்சாரங்கட்கும் அலங்காரம் செய்பவர்கள், அழகுபடுத்துவோர்கள் தொகை பெருகியுள்ளது. பிரபாகரன் 14 வயதில் போராளியானார் என்று கூட புலி பிரச்சாரங்கள் எழுதுகின்றன. அதாவது இளைஞர் போராட்டம் பற்றிய எந்தவித அசுமாத்தமும் எழாத 1968களில், 1954 ஆண்டில் பிறந்த பிரபாகரன் யாருமற்ற சூனிய வெளியிலே போராட ஆரம்பித்து விட்டார் என்ற வியத்தகு உண்மைகளை இந்நூலில் புஸ்பராசா பேசாமல்விட்டது கொஞ்சம் வியப்பாகவே உள்ளது. இன்றைய தேசிய தலைவரின் நானே அரசன்! நானே கடவுள்!! என்ற போக்கின் புதிய வடிவங்களை மோகிக்க புஸ்பராசாவிற்கு நிறைய காரணங்கள் உண்டு. அமிர்தலிங்கத்தையும் பிரபாகரனையும் ஏற்று ஒன்று சேர எப்படி புஸ்பராசாவால் ஆதரிக்க முடிகிறது? கொலை செய்தவரையும் கொலை செய்யப்பட்டவரையும் எப்படி ஒன்றாய் போற்ற முடிகிறது? இங்கு இவரை இணைப்பது தமிழ் தேசிய உணர்வல்ல வர்க்கம் சார்ந்த பொதுப் புத்தியாகும். அது சார்ந்த கருத்துக்களாகும்.

வல்வெட்டித்துறை

"வல்வெட்டித்துறை மக்களின் விடுதலைக்கான போராட்டம் மீதான ஆர்வத்தை யாரும் சந்தேகிக்க முடியாது. விடுதலைக்காக தங்களையே அழித்துக் கொண்ட மக்கள் அவர்கள் போர்மயமான வாழ்க்கைதான் ஆண்டாண்டு காலமாக அரசபடையுடன் மோதியே பழக்கப்பட்டவர்கள வல்வெட்டித்துறை என்றால் மாத்தறையில் உள்ள சிங்களவனுக்கு குலை நடுங்கும்" இது புஸ்பராசாவின் வல்வெட்டித்துறை பற்றிய வாழ்த்துப்பா. இந்தளவுக்கு வெளிப்படையாய் ஊர் பெருமை பேச புலிகள் கூட வெட்கப்படுவார்கள். ஆனால் ஒரே சமயத்தில் தமிழ் தேசியப்பற்றாளர், இடது போக்காளர், பின்நவீனத்துவத்தின் காதலர், தலித்தியத்தால் ஈர்க்கப்பட்டவர், பெரியாரில் புதையுண்டவர் என்று பெயரெடுக்க ஆசைப்படும் புஸ்பராசா என்ற பல்வேட நாயகரோ யாழ்ப்பாணப் பிரதேசம் சார்ந்த வல்வெட்டித்துறையின் ஊர்ப்பெருமை பேச தன்னை அர்ப்பணித்துள்ளார். வல்வெட்டித்துறை வீரத்தின் விளைநிலமாக ஆகிவிடுகின்றது. புலிகளின் பாசிசத்திற்கு தத்துவம் வரையும்> கூலித்தத்தவ ஆசிரியர் பாலசிங்கம் " வரலாற்று ரீதியாகவே வல்வெட்டித்துறை மக்கள் விடுதலையுணர்வும் வீரமிகுபண்புகளும் படைத்தவர்கள். இதனால் இப்பட்டினம் சிங்கள எதிர்ப்பு இயக்கத்திற்கு ஒரு தளமாக இருந்து வந்ததுடன் வீரம் செறிந்த தேசிய விடுதலை வீரர்களையும் உருவாக்கியது. இந்தப்புரட்சிகர சூழலில் பிறந்த பிரபாகரன் சிறுபிராயத்திலிருந்தே விடுதவையுணர்வும் வீரமும் மிக்கராய் திகழ்ந்தார்" என்கிறார். ஆக வல்வெட்டித்துறையில் பிறப்பவர்கட்கு வீரம், விடுதலையுணர்வு என்பன பிறவிக் கொடை, வல்வெட்டித்துறையில் பிறக்காதவர்கட்கு இத்தகைய கொடுப்பனவு கிடையாது, அவர்கள் சாதாரணமானவர்கள் என்று எமக்கு இவர்கள் பொருள் கொள்ளும்படி அறிவுரை தருகின்றார். புஸ்பராசா முதல் பாலசிங்கம் வரை எவருக்கும் சமூகவியல், மானுடவியல் பண்புகள் பற்றி எந்த கவலையும் அறிமுகமும் இல்லை.

புஸ்பராசாவின் வல்வெட்டித்துறை ஊர் சார்ந்த பிரதேசப்பெருமைகள் தேசிய வாதத்தை விட தரம் தாழ்ந்தவை, படுகேவலமானவை என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. யாழ்ப்பாணப் பிரதேசவாதத்திலும் குறுகிய ஊர்ப்பெருமைகளிலும் தின்று தினவெடுத்து நிற்கும் புஸ்பராசாக்கள் மானுட மதிப்புக்கு தீர்மானகரமன எதிரிகள். வல்வெட்டித்துறைக்கு விசேட குணாம்சங்கள் உள்ளனவா? வித்தியாசமான மனித நடத்தைகள் இயங்குகின்றனவா? என்பதை நாம் அதனது புவியியல் மற்றும் சமூக> பொருளியல் இயக்கத்தில் தேடிப் பார்க்க முயல வேண்டும். வல்வெட்டித்துறை ஒரு மைல் நீளமும் அரை மைல் அகலமும் கொண்ட சிறிய கிராமமாக இருந்த போதிலும் குடிசனத்தொகையில் இலங்கையில் காத்தான்குடியைப் போன்று சன அடர்த்தி கூடிய பகுதியாகும். வல்வெட்டித்துறை வல்வெட்டிக் கிராமத்தின் துறையாக இருந்து பின்பு வல்வெட்டித்துறையாக மாறியது. உண்மையில் வல்வெட்டியின் குறிச்சியே வல்வெட்டித்துறையாகும். வல்வெட்டித்துறையிலுள்ள பெரும்பகுதி நிலம் ஆரம்பத்தில் சிவன், அம்மன் கோவில் காணிகள் உட்பட யாவும் வல்வெட்டி சிறு நிலவுடமையாளர்கட்கே சொந்தமாய் இருந்தன. நல்ல நீரும் அருமையென்பதால் விவசாயம் இங்கு இல்லை. விவசாயத்திற்கேற்ற மண்ணும் அதுசார்ந்த பொருளாதாரமும் இன்மையால் சமூகத்தில் குடிமைமுறை நிலவவில்லை எனவே கடல்சார்ந்து வாழும் முறையே மீன்பிடியே பிரதான தொழிலாக இருந்தது. கள்ளக்கடத்தல் வளர்ந்து பொருளாதார ஆதிக்கம் பெருகிய பின்பே ஏழை மீன்பிடிக் கிராமமான வல்வெட்டித்துறை செல்வச்செழிப்பு மிக்க சட்டவிரோத நடவடிக்கையின் மையமாக யாழ் குடாநாட்டுள் உருவெடுத்தது. மீன்பிடி சமூகத்தையே கொண்டிருந்த இந்தக் கிராமம் தமக்குத் தொண்டு செய்யும் ஒரு ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த சில குடும்பங்களையும் கொண்டிருந்தது. கள்ளக்கடத்தல் சமூகமாக வல்வெட்டித்துறை மாறிய பின்னர், இம்மக்களிடையே பொருளாதார ஏற்ற இறக்கமும் சட்டவிரோத பொருளாதாரத்துடன் இணைந்த வாழ்வும் வலிமை பெற்றது.

வல்வெட்டித்துறை மீன்பிடிச் சமூகத்துள் நான்கு முக்கியமான பிரிவுகளுண்டு. முதலாவது உயர்நிலைப்பிரிவான குருகுலக்கரையார். இவர்கள் சிறு படகுகள் கட்டுவதுடன் 1947 ஆண்டிற்கு முன்னர் வரை பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு, சிங்கப்பூர், பர்மா வரை பொருட்களை கொண்டு சென்றனர். பெரும்பாலும் பண்டமாற்று வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்வதில்லை என்பதோடு அதை இழிவாய்க் கருதினர். இவர்கள் அநேகமாக பொருளாதார ரீதியில் உயர் நிலையில் இருந்தமையால் வர்த்தகர்களாகவும், அரச சேவைக்கும் சென்றனர். இவர்கள் கள்ளக்கடத்தலுடன் நீண்ட உறவுடையவர்களாவர். பிரபாகரன் இந்தப்பிரிவை சேர்ந்தவர். இரண்டாவது பிரிவானது ஆழ்கடலில் சென்று மீன்பிடிப்பவர்களாவர். இதில் தங்கத்துரை போன்றவர்கள் அடங்குவர். அடுத்த பிரிவு மீனவர்கள் சமூகமானது கட்டுமரங்களில் சென்று கிட்டடிக்கடலில் மீன்பிடிப்பவர்கள். குட்டிமணி இப்பரிவைச் சேர்ந்தவர் இறுதியாக உள்ள மக்கள் பிரிவு 'தப்புத்தண்ணிக்கரையார்' என அழைக்கப்பட்டவர்கள் இவர்கள் கரைக்குத்தி மீன்பிடிப்பவர்கள். மழைகாலத்தில் கடல் பெருகும் காலங்களிலும் மீன்பிடித்து வாழும் ஏழையான பின்தங்கிய மக்கள் பிரிவாகும். இவர்கள் கண்டி இறால் பிடிப்பது மற்றும் கூடுகட்டி மீன்பிடிப்பதென கடற்கரையோரங்களில் மரபு வழியான மீன்பிடியைத்தொழிலை செய்து வந்தனர். இந்த நான்கு பிரிவு மக்களிடமும் வர்க்க பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலவின. உண்மையான உழைப்பாளிகளான தப்புத்தண்ணீர்க்கரையாரிடம் தான் கூத்து போன்ற கலைவடிவங்கள் நிலவின. இவர்கள் தொழிலற்ற கோடைகாலங்களிலும், கள்ளு அதிகமாகவுள்ள காலங்களிலும் இவர்கள் கூத்துக்களில் ஈடுபடுவார்கள். ஆனால் கள்ளக் கடத்தல் வல்வெட்டித்துறையில் பெருகிய போது இவை அருகத் தொடங்கின. ஏனெனில் கடல்சார்ந்த உழைப்பு மீன்பிடித்தொழில் அழிவுற தொடங்கியமையின் அடையாளமாக இது இருந்தது.

தொடரும்...

Keine Kommentare: